விதியே! விதியே!
என் செய நினைத்தாய்
தமிழ்ச் சாதியை?
இவர்களுடைய
வார்த்தைகளுக்குக் கூட
வயதாகிப் போனது..
இவர்களுடைய
வணக்கங்கள் கூட
பழசாகிப் போனது!
சுவர்கள்
சிறைகளாகி விட்டன.
சுவரொட்டிகள்
பாடப் புத்தகங்களாகி விட்டன.
தமிழில்
எனக்குப்
பேசவராது – என்று
சொல்வது கூட ஒரு
தகுதியாகிவிட்டது.
தமிழெழுத்து அழகாக இருக்கிறது
தமிழர்களின்
தலையெழுத்து அல்லவோ
தலைகீழாய்த் தெரிகிறது......
விதியே விதியே
என் செய நினைத்தாய்
தமிழ்ச் சாதியை?
எங்களது கைகளிலே
முயற்சியென்னும்
விதைகள் இருக்கும் வரை
விழ மாட்டோம்!
புதைத்தாலும் நாங்கள்
புதையல்களாய் வெளிப்படுவோம்!
துருப்பிடித்துப் போகோம்
தூங்குகின்ற புயல்கள் யாம்!
விதியே விதியே
என் செய நினைத்தாய்
தமிழ்ச் சாதியை?
No comments:
Post a Comment