Tuesday, July 13, 2010

அவள் ஒரு தொடர்கதையானாள்.

அவள் ஒரு தொடர்கதையானாள்.

...................................................................................
நிலவன் சிறு வயதில் வெளிநாடு என்று வெளிக்கிட்டு, அவன் நோர்வேயை வந்தடையும் வரை அவன் பார்க்காத நாடும் இல்லை, அவன் இருக்காத மறியலும் இல்லையென்றுதான் சொல்லலாம். அங்கு இங்கு என்று அடிபட்டு கடைசியில் நோர்வேக்கு வந்து சேர்ந்தான். நோர்வேயை வந்தடைந்தவுடன் அவனது ஊரில் தெரிந்த ஒரு குடும்பத்தை சந்தித்து ஒரிரு மாதங்கள் அவர்களோடு இருந்தான். பிறகு அவர்கள் சொன்னார்கள் "நிலவன் நீ இப்படி இருக்காமல் அகதியாகப் போய் பதி" என்று. பின்னர் ஒரு நாள் அவனையும் கூட்டிக்கொண்டு போய் அகதியாக அவனைப் பதிவு செய்தார்கள்.
அகதியாக பதிந்த பின்னர் அவனது வாழ்வு அகதி முகாமில் ஆரம்பித்தது. அந்த முகாமில் இருக்கும் அந்த அதிகாரிகள் அவனுக்கு ஒரு ரூம் கொடுத்து அங்கேயே தங்கக்

கூடியே வசதியும் கொடுத்துவிட்டார்கள். மேற்கொண்டு இந்த நாட்டில் இருப்பதென்றால் அந்த நாட்டு மொழி அவசியம். அந்த அதிகாரிகள் நிலவனை மொழி கற்பதற்கு பள்ளிகூடத்தில் சேர்த்தனர். இனி என்ன பள்ளிக்கூடமும் அவனது ரூமூமாய் சிறிது காலம் கழித்தான். சனி ஞாயிறு என்றால் அவனுக்குத் தெரிந்த அந்த குடும்பத்தின் வீட்டுக்கு போய் வருவான். இப்படியே ஒரு வருடத்தில் மொழியும் கற்று விட்டு தொழிற்கல்வியை தொடர்ந்தான். அந்த நேரம் தான் ஒரு நோர்வேஜிய பெண்ணை சந்தித்தான். அவளோடு நல்ல அன்பாக பழகினான் நாளடைவில் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. இருவரும் தங்கள் அன்பை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.

படம்: சேனா


பாடல்: உயிர் பிறந்தாலும்


கிட்டத்தட்ட இரண்டுமூன்று வருடங்களாக இருவரும் காதலராக வலம் வந்தனர்.

நிலவனுக்குள் ஒரு நினைப்பு. தான் ஒரு வெளிநாட்டுக்காரியை திருமணம் செய்துகொண்டு தாயகத்துக்கு போனால் எல்லோரும் தன்னை ஒரு பெருந்தன்மையோடு பார்ப்பார்கள். "அட நிலவன் ஒரு வெளிநாட்டுக்காரியை கட்டிக்கொண்டு வந்திருக்கிறான். நிலவன் பெரிய ஆள் தான்" என்று சொல்வார்கள் என்று நினைப்பு நிலவனுக்குள். இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்துவிட்டது. ஆறு மாதங்கள் வரையில் பெரிய பிரச்சனைகள் எதுவுமின்றி அவர்களது குடும்ப வாழ்க்கை ஓடியது. அதன் பின்னர் இருவருக்கும் ஒருசில கருத்துவேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்து, சடுதியாக அவர்களிடையே இடைவெளி அதிகரித்து, வெகு விரைவில் பிரிந்து விட்டார்கள்.



மீண்டும் நிலவன் தனிமைப்படுத்தப்பட்டு தனியாகவே வாழ்ந்துவந்தான். நிலவனுக்கு தெரிந்தவர்கள் "நிலவன் நீங்கள் இப்படி தனியாக இருப்பது சரியில்லை. இப்படி எவ்வளவு காலம் தனியாக இருப்பது. உங்களுக்கென்று ஒரு துணை வேண்டும். இந்த வெளிநாட்டுகாரியை எல்லாம் விட்டுப்போட்டு நாட்டில் போய் நல்ல நம்முடைய தமிழ் பிள்ளையை கலியாணம் செய்துகொண்டு வாங்கோ. வந்து நல்லா வாழப்பாருங்கோ" என்று அறிவுரை கூறினார்கள்.



நிலவனும் "அவர்கள் சொல்வதும் சரிதான். இப்படி இருந்து நான் என்ன செய்வது. தனியாக இருந்து யோசிக்க யோசிக்க வருத்தம் தான் வரும். தெரிந்தவர்கள் கூறுவது போல் நான் ஒரு கலியாணத்தை செய்தால் என்ன?" என்று தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டான். படுக்கைக்குப் போகும்போதெல்லாம், யோசித்தான், படுக்கையில் சாய்ந்தான், புரண்டான், அடுத்த முடிவு என்ன ? என்ன என்ற கேள்வி அவனுள் ஓயாமல் ஒலிக்க ஆரம்பித்தது.



இறுதியில் ஓர் முடிவையை எடுத்தான். இன்னொரு திருமணம் செய்யத்தான் வேண்டும். அவனது சொந்தம் பந்தம் தெரிந்தவர்கள் என அனைவரிடமும் தனக்கு ஒரு கஷ்டப்பட்ட பெண் ஒன்று பார்க்கசொல்லி சொன்னான். பிறகென்ன பெண் பார்க்கும் படலம் தடல்புடலாக நடந்தது.



அந்த நேரம்தான் மதுசாவுக்கு மாப்பிள்ளை பார்க்கச்சொல்லி மதுசாவின் அண்ணன்மார் கலியாண புரோக்கரிடம் சொன்னார்கள். மதுசாவின் மூன்று அண்ணன்மாரும் நோர்வேயில்தான். நிலவனின் உறவினரும் அதே புரோக்கரிடம் நல்ல பிள்ளை இருந்தால் சொல்லுங்கோ என்று சொல்லி வைத்தனர். பிறகென்ன புரோக்கர் பாடு கொண்டாட்டம் தான் அவருடைய வேலையை அவர் செய்தார். ஆனால் புரோக்கருக்குத் தெரியாது மதுசாவின் அண்ணன்மாருக்கு நிலவன் நண்பன் என்று. நண்பனாக இருந்தும், மதுசாவின் அண்ணன்மாருக்கு, நிலவனுக்கு மதுசாவை திருமணம் செய்து வைக்கலாம் என்ற எண்ணம் வந்ததில்லை.



புரோக்கர் மதுசாவின் அண்ணன்மாருக்கு நிலவனைப்பற்றி தெரிவித்தபோதுதான் அவர்களும் இதைப்பற்றி யோசித்துப் பார்த்தார்கள். அண்ணன்மார் மூவரும் சேர்ந்து கதைத்தனர். 'நிலவன் மிகவும் நல்லவன். வெளிநாட்டுக் காரியைத் திருமணம் செய்த ஒன்றுதான் அவன் செய்த பெரிய தவறு. இது அனேகமாக வெளிநாடுகளில் நடக்கும் ஒருவிடயம் தானே. நல்ல வசதியாகவும் இருக்கிறான் நிலவன். இதை மறைத்து விட்டு நாம் கல்யாணத்தை நடத்துவோம். தெரிய வரும்போது சின்ன பிரச்சினை வரும்தான். ஆனால் எங்களுடைய தங்கை மிகவும் பொறுமையானவள். அதை பெரிதாக எடுக்க மாட்டாள் சமாளித்துக்கொள்வாள். இதை பற்றி நிலவனிடம் கதைப்போம்' என்று முடிவெடுத்தனர்.



நிலவனிடமும் கதைத்தனர். நிலவன் "நான் திருமணம் ஆனவன் என்று முதலிலேயே அவவிடம் சொல்லுங்கோ. பிறகு தெரியவரும்போது பிரச்சினை தானே." என்று அவர்களிடம் சொன்னான். அவர்களோ "இப்ப சொல்ல வேண்டாம். நீங்கள் திருமணம் ஆன பிறகு சொல்லுங்கோ. உங்களை போல் ஒரு கணவர் கிடைக்க எங்கள் மதுசா கொடுத்து வைக்க வேண்டும்." என்று சொல்ல நிலவனும் அதை ஏற்றுக்கொண்டான். மதுசா அழகு என்றால் அப்பிடியொரு அழகு. அவள் அழகை பார்ப்பவர்கள் எல்லோரும் 'செதுக்கிவைத்த சிலையைப் போல்' இருக்கிறாளே என்று நினைப்பார்கள்.

மதுசாவோடும் இதைபற்றி அண்ணன்மார் கதைத்தனர். மதுசாவுக்கு நிலவனின் போட்டோ அனுப்பி, அவளின் சம்மதத்தையும் அறிந்தனர். எல்லாம் சரியென்று வந்துவிட்டது . நிலவனோடு மதுசாவை ரெலிபோனில் கதைக்க விட்டனர். மதுசாவும் நிலவனும் ரெலிபோனில் தங்கள் அன்பை பகிர்ந்தனர். நிலவன் மதுசாவோடு கதைக்கும் போதெல்லாம் தனக்குள் ஒரு குற்ற உணர்வு எட்டிப் பார்ப்பதை உணர்ந்தான். என்ன செய்வது அண்ணன்மார் கேட்டுக்கொண்டபடி மறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். மதுசாவை இங்கு கூப்பிடுவதற்காக ஸ்பொன்சர் வேலைகளும் எல்லாம் நடந்தது. இப்படியே சிறிது காலத்தில் மதுசாவும் நோர்வேக்கு வந்துவிட்டாள். மதுசா நோர்வேக்கு வந்து ஓரிரு மாதங்களில் திருமண ஒழுங்குகளும் நடந்தன.



மதுசா நிலவன் திருமணம் இனிதாக நடபெற்றது.



படம்: சாமி


பாடல்: இதுதானா



திருமணபந்தத்தில் நுழைந்தவளுக்கு அன்று முதல் இரவு. 'அவர் என்ன கேட்பார். அதுக்கு நான் எப்படி பதில்சொல்வது' என்று ஒரு படபடப்போடு ஆவலாய் அறையில் நுழைந்தாள். அறையில் நுழைந்தவளுக்கு இடி பின்னால் இருப்பது தெரிந்திருக்கவில்லை. அவளும் அறைக்குள் போய் ஒரு வெட்கத்தோடு கட்டிலில் அமர்ந்தாள். நிலவுனுக்குள்ளேயோ 'நான் பெரிய குற்றத்தை மறைத்து இருக்கிறேன். மதுசாவிடம சொல்லத்தான் வேண்டும். எப்படி ஆரம்பிப்பது, எப்படிச் சொல்வது. ஏன் இத்தனை நாள் சொல்லவில்லை என்று கேட்டால் என்ன சொல்வது' என்று ஒரு உறுத்தலாகவும், போராட்டமாகவும் இருந்தது. 'சரி, இன்று எப்படியும் கண்டிப்பாக மதுசாவிடம் சொல்லிவிட வேண்டும்' என்று முடிவெடுத்தான்.



நிலவன் அவள் அருகில் வந்தான். "மதுசா.........." என்றான் மெதுவாக.



"சொல்லுங்கோ" அவள் வெட்கத்துடன் மெதுவாக சொன்னாள்.



"நான் உன்னிடம் ஒன்று சொல்லவேண்டும்........" என்று மெதுவாக ஆரம்பித்தான் நிலவன்.



"சொல்லுங்கோ......... என்ன வென்று?" என்று சிரிப்போடு மதுசா கேட்டாள்.



"நான் சொல்லப்போகிற விசயம் நீ கேட்டால், உன் மனநிலை என்ன ஆகும், அதை நீ எப்படி சகித்துகொள்வாயோ தெரியவில்லை. நான் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நான் இதுவரை எப்படி எப்படியோ வாழ்ந்துவிட்டேன். இனி உன்னோடு எப்படி நான் இருக்க வேண்டும் என்று நீ ஆசைப்படுகிறாயோ அப்படியே இருப்பேன். இனி எல்லாமே நீ தான் எனக்கு. இந்த தவறை நான் மட்டும் செய்யவில்லை. உன்னுடய அண்ணன்மார்தான் சொல்லவேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் இனிமேலும் இதை உன்னிடம் மறைக்க என்னுடைய மனம் இடமளிக்கவில்லை மதுசா" என்று நிலவன் பீடிகைபோட்டான்.



நிலவன் இப்படி பேசப்பேச மதுசாவுக்கு குழப்பமாக இருந்தது. என்னதான் சொல்லப் போகிறான் என்று எண்ணியபடியே, மதுசா



குறுக்கிட்டாள் "சொல்லவந்ததை கெதியாய்ச் சொல்லுங்கோ.....".



"ம்............. நான் சொல்கிறேன் ஆனால்................." என்று நிலவன் இழுத்தான்.



"ஏன் நீங்கள் சொல்ல கஷ்டப்படுறீங்களோ. தயவுசெய்து சொல்லவந்ததை சொல்லுங்கோ............." என்று அவசரப்படுத்தினாள் மதுசா.



"சரி மதுசா நான் சொல்லி விடுகிறேன்..........", அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே நிலவன் சொன்னான் "நான் ஏற்கனவே திருமணமானவன்.........".



"என்ன ஏற்கனவேஏஏஏ..............." என்று மதுசா ஒருகணம் தடுமாறினாள். நிலவன் ஒரு நடுக்கத்தோடும், பதட்டத்தோடும் திரும்ப அதையே கூறிவிட்டு சிறிது அமைதியானான்.



மதுசாவின் நெஞ்சில் பேரிடியே விழுந்தது போல் இருந்தது. இவை எல்லாவற்றையும் ஆரம்பத்திலேயே ஏன் எவரும் தன்னிடம் கூறவில்லை என்பதே அவளுக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது. அவளுக்கு கதைப்பதற்கு வார்த்தைகள் எதுவுமே வரவில்லை. மதுசா சிறு வயதிலே தாய் தகப்பனை இழந்தவள். மதுசா சிறு வயதாக இருக்கும் போது அவர்கள் வீடு திடீர் என்று சிறு தவறால் தீப்பிடித்து விட்டது. அந்த சமயத்துல் மதுசாவின் அப்பாவும் அம்மாவும் வீட்டோடு எரிந்துவிட்டனர். அதன்பின் மதுசா அவளின் பெரியம்மாவுடன் தான் வளர்ந்தவள். மதுசா மிகவும் பொறுமை சாலி, மிகவும் அமைதியானவள். நிலவன் விசயத்தில் இதை எல்லாம் நினைத்து பொறுமையாக சகித்துகொள்ள முடிவெடுத்தாள். இதை மேலும் நிலவனிடம் துருவி கேட்பதற்கு அவள் மனம் இடம் கொடுக்க வில்லை. இதை அனைத்தையும் தன் மனதிற்குள் போட்டுப் புதைத்துக் கொண்டாள்.

சிறியதொரு இடைவெளியின் பின்னர் நிலவன் மீண்டும் "நான் ஒரு நோர்வேஜிய பெண்ணை திருமணம் செய்து இருந்தேன். இருவருக்கும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இருவரும் பிரிந்து விட்டோம்." என்று மிகச் சுருக்கமாகக் கூறி முடித்துவிட்டான்.



மதுசாவுக்கு மீண்டும் ஓர் இடி........ 'பிள்ளையுமா இருக்கு' என்று தனக்குள் கேள்வி கேட்டு கலங்கினாள். அதுவே அவளுக்கு பெரிய இடியாய் இருந்தது. உண்மையை முதலே சொல்லி இருந்தால் ஒரு வேளை இதன் தாக்கம் குறைவாக இருந்திருக்கலாம். இப்போது அவன் தன்னை ஏமாற்றிவிட்டது போன்ற ஓர் உணர்வு. எங்கேயாவது போய் விடாலாமா என்றுகூட மதுசாவுக்கு தோன்றியது. தன்னுடைய அண்ணன்மார்களை நினைத்து ஒரு கணம் கோபம் தலை உச்சிக்கே ஏறியது. என்ன செய்வது அவளின் பொறுமையான குணத்தால் சகித்துகொண்டு தன் நிலையை நினைத்து, எது நடந்தாலும் இனி இப்படியே வாழ்வது என்று முடிவுடன் போய் படுக்கையில் சாய்ந்தாள். அவள் தனது முடிவை மறு நாளிலிருந்து செயற்பாட்டுக்கும் கொண்டு வந்தாள்.



நிலவனும் அவளிடம் மிகவும் அன்போடு நடந்து கொண்டான். அவளும் நடந்தவற்றை தனது முடிவின்படியே முற்றிலுமாய் மறந்து விட்டு, அவனுடன் இனிதான இல்லறத்தை நடாத்தத் தொடங்கினாள். எந்தவித காரணத்தினாலும் இருவரின் வாழ்க்கையிலும் வேறு எந்த ஒரு கசப்பும் இல்லாமல் இப்படியே இரண்டு வருடம் உருண்டது. திடீர் என்று நிலவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் வந்துவிட்டது.



"நிலவன் வாங்கோ ஹொஸ்பிற்றலுக்கு போவோம்".



"வேண்டாம் மதுசா. பார்த்து போவோம்" என்று புரண்டு படுத்தான் நிலவன்.



"இல்லை நிலவன் வாங்கோ போவோம்" வற்புறுத்தினாள் மதுசா.

மதுசாவின் கரைச்சல் தாங்க முடியாமல் நிலவனும் புறப்பட்டான். இருவரும் ஹொஸ்பிற்றலுக்கு போனார்கள் டொக்டரும் வந்தார். அவனது உடலை செக் பண்ணினார்.



மதுசாவை டொக்டர் தனியாக அழைத்தார். உனது கணவருக்கு கேன்சர் என்று அறிவித்தார். மதுசாவின் கண்கள் கண்ணீர் குளம் ஆகியது. என்ன செய்வது என்று அறியாத நிலையில் இருவரும் வீடு திரும்பினார்கள். நிலவனை அடிக்கடி ஹொஸ்பிற்றலுக்கு அழைத்துச் செல்ல வேண்டி இருந்தது. இரண்டு வருடங்கள் இப்படியே வீடும் ஹொஸ்பிற்றலுமாக அலைந்தார்கள். மதுசா அவரது அண்ணன்மாருக்கும் இதை அறிவித்திருந்தாள். இந்த இரண்டு வருடத்திற்குள் மதுசா நிலவனோடு பட்ட பாடு சொல்லமுடியாது. இருவருக்கும் உடல் ரீதியாக எந்த தொடர்பும் இருக்கக்கூடாது என்றும் டொக்டர் சொல்லிவிட்டார்.



நிலவன் மதுசாவை பார்த்து, "நீ பாவம் மதுசா. உனக்கு ஏன் இந்த நிலை" என்று கவலைப்படுவான். அதே நேரம் அவனுக்குள், 'தான் உயிரோடு இருக்கும் போது தன்னை விட்டு அவள் போய் விடுவாளோ, வேறு யாரையும் கல்யாணம் செய்துவிடுவாளோ' என்ற ஒரு பயமும் இழையோடியது. இந்த வருத்தம் வந்த பிறகு இவனுடைய மனநிலையில் குழப்பம், மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.



எங்கேயாவது இருவரும் வெளியில் போவார்கள். யாராவது தெரிந்தவர்கள் வந்தால், சந்தோசமாக கதைப்பார்கள். மதுசாவும் கதைப்பாள். அவர்கள் சொல்வார்கள் "உன் மனைவி அழகானவள். நல்லா கதைக்கிறாள்" என்று. அது நிலவனுக்குப் பிடிக்காது. வீட்டுக்கு வந்தவுடன் குடிப்பான். மதுசாவோடு சண்டை பிடிப்பான். "நீ அவர்களை பார்த்து சிரித்தாய், கதைத்தாய்" என்று ஏதாவது குற்றப் பத்திரிகை வாசிக்க ஆரம்பிப்பான்.
"நீங்கள் என்னை இனிமேல் வெளிய கூப்பிடாதையுங்கோ. நானும் வரமாட்டேன்" என்று சொல்லி மதுசா அழுவாள்.




ஆனால் அதே நிலவன் மறுநாள் மதுசாவைப் பார்த்து "மதுசா நேற்று உன்னோடு நான் சண்டை பிடித்தேன். என்னை மன்னித்துக்கொள்" என்பான். "நான் நீண்ட நாளுக்கு உயிரோடு இருக்க மாட்டேன். நான் செத்துவிட்டால் நீ இன்னொரு திருமணம் செய்து நல்லா வாழவேண்டும். சரியா?" என்றும் சொல்லுவான்.



மதுசாவின் வாழ்க்கைக்காலம் கண்ணீரும் கவலையுமாகத்தான் உருண்டபடி இருந்தது. சில காலத்தில் நிலவனுக்கு உடல் நிலை மிகவும் மோசமாகிக்கொண்டு வந்தது.



டொக்டர் பார்த்துவிட்டு இன்னும் ஐந்து மாதம் தான் இவர் உயிரோடு இருப்பார் என்று கூறிவிட்டார். ஐந்து மாதமும் ஹொஸ்பிற்றலில்தான் நிலவன் இருக்க வேண்டும் என்றும் கூறி விட்டார்.



மதுசாவின் அண்ணன்மாரும் வந்து போவார்கள். அவர்களை பார்க்கும் போதெல்லாம் மதுசாவுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கும். அதே நேரம் 'அவர்களை நொந்து என்ன செய்வது என் தலை விதி இப்படி அமைந்து விட்டது. யார் என்ன செய்ய முடியும்' என்று தன்னைத்தானே சாமாதானப்படுத்திக் கொள்வாள். இப்படியே ஐந்து மாதத்தில் இரண்டு மாதம் கழிந்து விட்டது. நிலவனின் நிலையும் மிகவும் கவலைக்கிடமானது. மதுசாவுக்கும் ஹொஸ்பிற்றலிலேயே தங்குவதற்கு வசதியும் கொடுக்கப்பட்டிருந்தது.



ஒவ்வொருநாளும் நிலவனின் முகத்தை மதுசா பார்க்கும் போதெல்லாம் அவள் உயிர் அவளிடத்தில் இல்லை.



"மதுசா நான் இன்னும் மூன்று மாதத்தில் உன்னை விட்டுப் பிரிந்துவிடுவேன்". அவன் கண்களில் நீர் வழிய கூறுவான். மதுசாவும் அவன் முகத்தை தன் நெஞ்சோடு அணைத்துகொண்டு, ஒரே கண்ணீரும் கவலையுமாகத்தான் இருப்பாள். இப்படியே போய் நிலமை மோசமாகி நிலவனால் சரியாகக் கதைக்கமுடியாத நிலமைக்குப் போய் விட்டது. மதுசாவின் நிலையை எப்படி சொல்வது. யாரும் அவள் முகத்தை பார்க்கமுடியாது அவ்வளவு வேதனையாக இருக்கும்.



நிலவனுக்கு இறுதி நேரம் வந்துவிட்டது. மதுசாவின் மடியில் அடிக்கடி தலை வைத்துப் படுத்துக் கொள்வான் நிலவன். அவன் உயிர் பிரியும் போது மதுசாவின் மடியில்தான் போகவேண்டும் என்று அடிக்கடி சொல்வான். ஒருநாள் அவன் ஆசைப்பட்ட படியே அவள் மடியில் படுத்தவாறே அவன் உயிரும் அவனைவிட்டு பிரிந்துவிட்டது.



மதுசா இவ்வளவு காலமும் அழுது அழுது, அவன் இறந்தவுடன் மதுசாவின் கண்களில் கண்ணீரை இல்லை யென்றுதான் சொல்லலாம். காரணம் அவள் கண்களில் கண்ணீர் வற்றி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நிலவனும் போய்விட்டான். மதுசாவை தனிமை வாட்டியது. மதுசாவின் தனிமை வாழ்க்கை மூன்று வருடம் இருக்கும். அதன் பின் அண்ணன்மார் மதுசாவை இப்படியே விடுவது சரியில்லை என்றும், அவளுக்கு என்று ஒரு துணை வேண்டும் என்றும், எங்கேயாவது நல்லவனாய் ஒருவனைத் தேடி மதுசாவுக்கு மணம் முடித்து வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.



அந்த நேரம்தான் மதுசாவின் கனடாவில் இருக்கும் சொந்த மச்சான் அமலன் நினைவிற்கு வந்தான். அமலனுக்கு நான்கு பெண் சகோதரர்கள். அவர்களை கரைசேர்க்கவேண்டும் என்று அவன் திருமணம் செய்யாமலே இருந்தான். பெண் சகோதரர்களையும் கரை சேர்த்தாயிற்று என்று அவன் நிம்மதியுடன் இருந்தான். அவனுடைய சகோதரர்கள், தாய் தகப்பன் எல்லோரும் தாயகத்தில் தான் இருந்தார்கள். நாம் எல்லோரும் மறப்போமா? அனைவருடைய மனதையும் ஒரே நேரத்தில் சுக்குநூறாக்கிய சுனாமி வந்தபோது, அமலனின் குடும்பத்தில் ஒரே ஒரு சகோதரியை தவிர மற்ற எல்லாரையும் சுனாமி காவு கொண்டது.



அதோடு அவன் வாழ்க்கையே தொலைத்துவிட்டதாய் எண்ணி இருந்தான். 'இனி எனக்கு வாழ்க்கையில் எல்லாமே என் சகோதரிதான்' என்று ஒரு முடிவோடு இருந்தான். அவனது சகோதரி அவனை அப்பிடி இருக்க விடவில்லை. "நீ ஒரு திருமணம் செய்ய வேண்டும். நமது குடும்பமே அழிந்து விட்டது. உனக்கென்று ஒரு குடும்பம் வேண்டும" என்று அவள் அவனை ஆறுதல் படுத்தி அவனை ஒருவாறு திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டாள்.



அமலன் சகோதரியிடம் ஒரே ஒரு வேண்டுகோள் வைத்திருந்தான்.



"நான் திருமணம் செய்வதாக இருந்தால் ஒன்று கணவன் இறந்த விதவையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் சுனாமியால் பாதிக்கப்பட்ட, யாருமே இல்லாத ஒரு பெண்ணாக இருக்க வேண்டும்".



இதை கேள்விப்பட்ட மதுசாவின் அண்ணன்மார் மதுசாவுக்கு பேசி முடித்துவிடுவோம் என்று கதைத்தனர். அமலனோடும் கதைத்தனர் அமலனும் இதை ஏற்றுக்கொண்டான். ஆனால் மதுசாவுக்கு இதில் கொஞ்சம்கூட ஈடுபாடே இல்லை. அண்ணன்மாரும் இதை விடவில்லை. மதுசாவை வற்புறுத்தி ஏற்கவைத்தனர்.



ஒருநாள் ஓய்வாக இருந்த ஒருவேளையில், மதுசாவுக்கு தொலைபேசி அழைப்பு.........



மதுசா: ஹலோ......... ஹலோ யார் கதைக்கிறீங்கள்........

அமலன்: நான் அமலன். மதுசா என்ன செய்றீங்கள்? நலமா?.....



மதுசா: ம்............. நீங்கள் என்று ஒரு வேண்டா வெறுப்போடு பதில் அழித்தாள்.

அமலன்: ஏன் மதுசா என்னோடு கதைக்க உங்களுக்கு விருப்பம் இல்லையா. சலிப்போடு பதில் வருகிறது.



மதுசா: இல்லை... சொல்லுங்கோ.

அமலன்:நம் இருவருக்கும் திருமணம் பேசி இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும் தானே. இதில் உங்களுக்கு

விருப்பம் இல்லையா?



மதுசா: நான் அப்பிடி ஒன்றும் சொல்லவில்லை. நான் ஏற்கணவே திருமணம் ஆனவள். நீங்கள் அப்பிடியில்லை. நீங்கள் ஏன் என்னை திருமணம் செய்வதற்கு நினைக்கிறீர்கள். நான் எப்படி எனது பழைய வாழ்க்கையை மறப்பது? அது கலியாணமாக மட்டும் இருந்தால், நான் ஒரு வேளை மறந்துவிடலாம். அந்த வாழ்க்கையே நானாக இருக்கும் போது எப்படி இன்னொருவரோடு வாழ்வதற்கு என் மனம் இடம்கொடுக்கும். அதை அனுபவிக்காத உங்களுக்கு இது விளங்காது அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்று மூச்சுவிடாமல் கூறினாள்.



அமலன்: எல்லாம் தெரிந்துதான் நான் உங்களை திருமணம் செய்வதற்கு சம்மதித்தேன். நான் எந்த வகையிலும் உங்கள் மனம் நோக நடக்க மாட்டேன். நானும் என் குடும்பத்தையே இழந்துவிட்டு நிற்கிறேன். உங்களுக்கு தெரியும் தானே. நானும் எல்லாவிதமான கஷ்டத்தையும் அனுபவித்துவிட்டேன். எனக்கும் தெரியும் கஷ்டம் என்றால் என்ன வென்று. அதனால் தான் இப்படியொரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்தேன். எனக்கு திருமணம் ஒன்று நடந்தால் அது இப்படிப்பட்ட ஒரு பெண்ணோடுதான் இருக்கவேண்டும். எனது குடும்பம் அந்த பாழாய்ப் போன சுனாமி அழிந்தவுடன் முடிவெடுத்தேன். நான் உங்களை எந்த வகையிலும் வேதனைப்படுத்த மாட்டேன் சரியா மதுசா.

என்று தனது ஆதங்கங்களை கொட்டி தீர்த்தான்.



மதுசா மவுனமாக இருந்தாள்.



அமலன் மீண்டும் "என்ன மதுசா?





இதுக்கு மேலும் உங்களுக்கு என்னைத் திருமணம் செய்வதில் விருப்பமில்லையா?" என்று கேட்டான்.



மதுசா "உங்களுடைய கஷ்டமெல்லாம் எனக்கு விளங்காமல் இல்லை. நான் எல்லாம் அனுபவித்துவிட்டேன். ஆனால்....................நீங்கள்..................." என்று வசனத்தை முடிக்காமல் நிறுத்தினாள்.



அமலனோ "இனி நீங்கள் இப்படி கதைக்க கூடாது. நீங்கள் திருமணம் ஆனவர் என்று நான் ஒரு போதும் நினைக்க மாட்டேன் சரியா." என்று கேட்டான்.



மதுசா "ம்........................" என்று ஒற்றைச் சொல்லாய் பதில் கொடுத்தாள்.



அமலன் மீண்டும் "ஒகேதானே? இப்ப எல்லாம் சரிதானே........... ? என்னை உங்களுக்கு பிடித்து இருக்குத்தானே?" என்று கேள்விகளை தொடுத்தான்.



மதுசா அதற்கும் "ம்.................. " என்று ஒரு வார்த்தையில் பதில் கூறிவிட்டு நிறுத்திக் கொண்டாள். அமலனின் நல்லெண்ணமும், இந்த இளம் வயதில் எவருடைய துணையுமின்றி எப்படி தனியாக வாழப் போகிறோம் என்ற பயமும் அவளை இந்த வாழ்வுக்கு சம்மதம் தெரிவிக்க வைத்தது.



இதே சமயம் கனடாவில் அமலனுக்கு அந்த நாட்டில் இருக்க கூடிய அனுமதியும் இல்லை, விசாவும் இல்லை. மதுசா தான் அவரை நோர்வேக்கு கூப்பிட்டாக வேண்டும். அமலனை தாயகத்துக்கு திரும்பி போகும்படியும், தான் பின்னர் ஸ்பொன்சர் செய்து நோர்வேக்கு கூப்பிடுவதாகவும் மதுசா அமலனிடம் தெரிவித்தாள். அதே போல் அமலனும் தாயகத்துக்கு போனான். மதுசாவும் தாயகத்துக்கு போய் இருவரும் ஒரு கோவிலில் தாலி கட்டிவிட்டு, தங்கள் திருமண வாழ்க்கையை தொடர்ந்தனர்............



தற்போது அமலனும் நோர்வேக்கு வந்துவிட்டார் இருவரும் சந்தோசமாக வாழ்கின்றனர்.



படம்: பவர்


பாடல்: மலரே நீ வாழ்க

No comments:

Post a Comment